அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரிப்போர் நடத்திவந்தார். இதனால் உலக நாடுகளுக்கு மத்தியில் மட்டுமல்லாமல், தன் சொந்த நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதன் வெளிப்பாடாக அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், “மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். “எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

