Last Updated:
Donald Trump | தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் முற்றிலும் வெட்கப்படுகிறேன் – டிரம்ப்..!
தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் முற்றிலும் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிர்மப், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வரி விதிப்புகளை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் அதில் 6 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.
இறுதியில் 6-க்கு 3 என்ற வாக்குகளின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாடாளுமன்றத்தை மீறி தனிச்சையாக வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரமில்லை எனவும், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை டிரம்ப் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் அந்நாட்டு பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சியடையத் தொடங்கின. எஃகு, அலுமினியம், தினசரி நுகர்வு உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்துள்ள டிரம்ப், தனது வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உலக அரங்கில் தன்னை அவமானப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார். மேலும் தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளை எண்ணி தான் வெட்கப்படுவதாகவும், 122வது சட்டப்பிரிவின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகளுக்கு மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்த டிரம்ப், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.
மேலும், நீதிமன்ற உத்தரவால் ஒப்பந்தங்கள் பாதிக்காத வகையில் புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் எனவும் டிரம்ப் கூறினார். நீதிமன்றத்தின் உத்தரவால் தனியார் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான வரி பாக்கியை வழங்குவது குறித்து நீதிமன்றம் மூலமே தீர்வு காணப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.


