Last Updated:
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முறையில் நடைபெற்றதாக அமெரிக்காவும் ஈரானும் தெரிவித்தன. ஆனாலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது படைகளை குவித்து வருகிறது அமெரிக்கா. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் F-35 Lightning II, F-22 Raptor மற்றும் F-16 Fighting Falcon உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை அமெரிக்கா, ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள ராணுவ தளங்களுக்கு அனுப்பியுள்ளது. இவை உலகின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஸ்டெல்த்’ (Stealth) ரக விமானங்களாகும்.
அரேபிய கடலில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) கப்பலுடன், தற்போது உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald R. Ford) மற்றும் அதன் துணை போர்க்கப்பல்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி விரைந்துள்ளன. வான்வெளியிலேயே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதிகளையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது.
ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்குள் ஒரு தெளிவான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருபுறம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், மறுபுறம் அமெரிக்கா தனது ராணுவத்தை குவித்து வருவது ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் வளைகுடாவில் ரஷ்யாவுடன் இணைந்து ஈரான் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. சர்வதேச நாடுகளுக்கு ஹார்முஸ் நீரினை வழியாகவே கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது.
இந்நிலையில் போர் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் அந்த வழியாக வணிகம் நடப்பது பாதிக்கப்படும். ந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் அந்த வழியாகவே கொண்டு வரப்படுகிறது. ந்த சூழல்களால் கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்திய commodity சந்தையான MCX-ல் ஒரு பேரல் விலை 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்து வர்த்தகமானது.

