ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளது.
அமெரிக்கா தனது இராணுவத் தளவாடங்களை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்தியுள்ள நிலையில், உலகளாவிய மசகு எண்ணெய் விலை 1.6 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 71.49 டொலராகவும், அமெரிக்க மசகு எண்ணெய் 1.74 சதவீதம் உயர்ந்து 66.18 டொலராகவும் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஒருநாள் உயர்வு எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதுகாப்பான முதலீடு
இதேவேளை, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதால், அதன் விலையும் 2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டொலர் எனும் உச்சத்தை எட்டியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த ஆலோசனைகளின்போது, ஈரான் பிரதிநிதிகள் சில “சிவப்பு கோடுகள் (red lines)” குறித்து உடன்பட மறுத்ததே இந்தத் தீவிர நிலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே உருவெடுத்துள்ள இந்த புவிசார் அரசியல் நெருக்கடி, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு பொருளாதார நெருக்கடியைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

