பெய்ஜிங்: தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சி நடத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையே என்ன மோதல்.. அதன் வரலாறு என்ன.. இதில் அமெரிக்கா நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.தைவானில் புதிய அதிபர் வில்லியம் லாய் பதவியேற்ற சில நாட்களில், தைவான் தீவைச் சுற்றி பெரியளவில் சீனா ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது.
தைவான் மீது முழு வீச்சில் தக்குதல் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இந்தப் பயிற்சிகள் அனைத்தும் எழுப்பும் முக்கிய கேள்வி.. சீனாவுக்கும் தைவானுக்கும் உள்ள பிரச்சினை என்ன.. தைவான் மீதான சீனாவின் உரிமைகோரல் என்ன என்பதைச் சுற்றித் தான் இருக்கிறது.
சீனா நிலைப்பாடு: சீனா இந்த தைவான் தீவைப் பிரிந்து இருக்கும் ஒரு மாகாணமாகப் பார்க்கிறது.. பிரிந்து சென்றாலும் அது தனது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா பார்க்கிறது.. தைவானைத் தன்வசப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லச் சீனா தயாராக இல்லை. ஆனால் தைவானில் மக்கள் மனநிலை நேர்மாறாக உள்ளது.
தைவான் மக்கள் தங்கள் தனி நாட்டில் இருப்பதாகவே கருதுகின்றனர்.. இப்போது இருக்கும் சூழலே நீடிக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். சரி இரு தரப்பிற்கும் இடையே இப்படி இடியாப்ப சிக்கல் இருக்கிறது என்றால்.. இதன் வரலாறு என்ன என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
தைவான் வரலாறு: தைவானின் நாட்டிற்கு முதலில் வந்தவர்கள் தற்போதைய தெற்கு சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. ஏசு பிறப்பிற்கு முந்தைய AD239இல் இந்த தைவான் தீவு குறித்து சீனாவின் ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. தைவான் சீனாவின் ஒரு பகுதி என அவர்கள் கூற இந்த ஆவணம் முக்கியமானது. டச்சு வசம் சென்ற தைவான் கொஞ்சக் காலத்திலேயே மீண்டும் சீனாவின் கிங் மன்னரிடம் வந்தது.. முதல் சீன-ஜப்பானியப் போருக்குப் பிறகு அது ஜப்பான் வசம் சென்றது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானது தோல்வியடைந்த நிலையில், தைவான் மீண்டும் மெயின்லேண்ட் சீனா வசம் சென்றது.. அப்போது அமெரிக்கா, இங்கிலாந்து என அனைத்து நாடுகளும் இதை ஏற்றன.
உள்நாட்டுப் போர்: ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. அப்போதைய தலைவர் சியாங் காய்-ஷேக்கின் படைகளை மாவோ கம்யூனிஸ்ட் இராணுவம் தோற்கடித்தது. இதையடுத்து சியாங் அவரது ஆதரவாளர்கள் 15 லட்சம் பேருடன் 1949இல் தைவானுக்குத் தப்பிச் சென்றனர்.1980கள் வரை தைவானில் தனியாக சியாங் சர்வாதிகார ஆட்சியை நடத்தினர். அவரது மறைவுக்குப் பிறகு தைவான் மெல்ல ஜனநாயகத்திற்குத் திரும்பியது.. அங்கு 1996இல் முதல் தேர்தல் நடந்தது.. அதன் பிறகே சர்வதேச நாடுகள் தைவானை ஏற்றுக் கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
உலக நாடுகள்: தொடக்கத்தில் தைவானில் வாழ்ந்த சியாங் அரசையே அதிகாரப்பூர்வ சீனாவாக உலக நாடுகள் கருதினர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட சீனாவின் இடம் சியாங் தரப்பிற்கே வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், 1970களில் நிலைமை மாற தொடங்கியது. சீனாவின் பிரதான நிலப்பகுதியில் வாழும் மக்களின் பிரதிநிதியாக சியாங் தரப்பைக் கருதப்பட முடியாது என்று முதலில் சில நாடுகள் கூறின. 1971இல் ஐநா சீனாவுக்கு அங்கீகரிக்கத் தொடங்கியது. 1978இல் அமெரிக்கா அதை அங்கீகரித்தது. தொடர்ந்து 1979இல் சீனாவுடன் தூதரக உறவையும் ஆரம்பித்தது.. அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகளும் தைவானை அங்கீகரிக்க மறுத்தன. இப்போது வெறும் 12 சிறிய நாடுகள் மட்டுமே தைவானைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
சீனா தைவான் உறவு எப்படி: 1980களுக்கு பிறகு சீனா தைவான் இடையேயான உறவுகள் மேம்படத் தொடங்கின. குறிப்பாக 1991இல், சீனா மெயின்லேண்ட் உடன் போர் முடிந்துவிட்டதாகத் தைவான் அறிவித்தது. அப்போது ஹாங்காங்கை போலவே “ஒரு நாடு, இரண்டு சிஸ்டம்” என்ற முறையில் தைவான் வரலாம் என்று சீனா ஒரு யோசனையை முன்மொழிந்தது.. இருப்பினும், சில காரணங்களால் இதைத் தைவான் நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த மெயின்லேண்ட் சீனா, தைவானின் அரசைச் சட்டவிரோதமானது என்று அறிவித்தது.
இருப்பினும் இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்தது.2000ஆம் ஆண்டில், தைவான் அதிபராக சென் ஷுய்-பியான் அதிபராகத் தேர்வான போது தான் சீனா கோபமடைந்தது. ஏனென்றால் இந்த சென்னின் ஜனநாயக முற்போக்குக் கட்சி தைவான் “சுதந்திரத்தை” வெளிப்படையாக ஆதரித்தது. 2004இல் சென் மீண்டும் அதிபராகத் தேர்வான போது.. தைவான் சீனாவிலிருந்து பிரிந்து செல்ல முயன்றால் ராணுவத்தைப் பயன்படுத்தலாம் என்ற சட்டத்தைச் சீனா இயற்றியது. இடையில் சீன ஆதரவு கட்சியின் ஆட்சி தைவானில் அமைந்ததால் நிலைமை கொஞ்சம் சீரானது.
சிக்கல்: இருப்பினும், 2016இல், டிபிபி கட்சியைச் சேர்ந்த சாய் இங்-வென் அதிபராகத் தேர்வான பிறகு நிலைமை மீண்டும் மோசமானது. ஏனென்றால் தைவான் ஏற்கனவே ஒரு சுதந்திரமான நாடு என்பதை வெளிப்படையாகச் சொன்னவர் சாய்.. இதனால் சீனா பேச்சுவார்த்தையைக் கூட நிறுத்திக் கொண்டது. இப்போது இந்த சாய் இங் வெனின் துணை அதிபராக இருந்த வில்லியம் லாய் அதிபராகத் தேர்வாகியுள்ள நிலையில் தான், சீனா இந்த புதிய போர்ப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா: இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா இப்போது மெயின்லேண்ட் சீனாவைத் தான் ஆதரிக்கிறது. சீனா என்று அவர்கள் பெய்ஜிங் தரப்பை மட்டும் அங்கீகரிக்கிறார்கள். ஆனால், தைவானையும் கூட சீனா தொடர்ந்து ஆதரித்தே வந்துள்ளது. தைவானுக்குத் தற்காப்பு ஆயுதங்களை வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் சட்டத்திலேயே இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா தைவானுக்கு ராணுவத்தை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா தைவானைத் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை என்றாலும் சீனா தாக்குதல் நடத்தினால் தைவான் அதை எதிர்கொள்ள ஆயுதங்களை வழங்கி வருகிறது.


