எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தே.மு.தி.க. எந்தப் பக்கம் என்று நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. தான் எதிர்கொண்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே 29 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான அரசியல் பயணத்தைத் தொடங்கியது.
ஆனால், அதன்பின்னர் அ.தி.மு.கவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நலக் கூட்டணியாக களம் கண்டு தோல்வியை சந்தித்தது.
2021 இல் அ.ம.மு.க, எஸ்.டி.பி.ஐ கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. (a)


