Last Updated:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இந்தியப் பிரதமர் மோடியின் சந்திப்பின் ஒரு பகுதியாக HAMMER ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டுனான இந்தியாவின் ராணுவ உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டிடமிருந்து 114 ரஃபேல் விமானங்களை வாங்க ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் அண்மையில், ஒப்புதல் அளித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து HAMMER ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பிரான்ஸின் சப்ரான் நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது ஒரு 50:50 கூட்டு முயற்சி ஒப்பந்தமாகும். இதற்காக புனேவில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, அங்கு ஏவுகணையின் வழிகாட்டுதல் கருவிகள் தயாரிக்கப்படும். பின்னர் படிப்படியாக 60 சதவிகித பாகங்கள் வரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் HAMMER ஏவுகணைகள் முதலில் ரஃபேல்-M ரக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும். 125 கிலோ, 250 கிலோ, 500 கிலோ, 1000 ஆயிரம் கிலோ என நான்கு VARIANT-களில் உருவாக்கப்பட்டிருக்கும் HAMMER ரக ஏவுகணைகள், எடைக்கு ஏற்றார் போல், இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். நகரக்கூடிய இலக்குகளையும் தாக்கி அழிக்கும் திறன் இருப்பதால், HAMMER குறி வச்சா 99 சதவீதம் இரை விழும் என கூறுகின்றனர் ராணுவ தளவாட நிபுணர்கள்.
பிரான்ஸ் விமானப்படை தனது ரஃபேல் போர் விமானங்கள் மூலம் 2008-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் முதன்முதலாக HAMMER ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. குகைகளிலும், பதுங்கு குழிகளிலும் ஒளிந்திருந்த தலிபான் பயங்கரவாதிகளை, HAMMER ஏவுகணையின் செங்குத்தான தாக்குதல் மூலம் நேசப்படைகள் தாக்கி அழித்தன.
ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து, HAMMER ஏவுகணைகள் லிபிய உள்நாட்டுப் போரின் போது ரஃபேல் விமானங்கள் மூலம் ஏவப்பட்டன. ஆப்பிரிக்க நாடான மாலியில் நடந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதல்களில் பிரான்ஸ் HAMMER ஏவுகணைகளை பயன்படுத்தியது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் HAMMER ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இதன் வெற்றியைக் கண்ட பிறகே, இந்திய விமானப்படை லடாக் போன்ற மலைப்பகுதிகளில் பயன்படுத்துவதற்காக அவசரகால அடிப்படையில் முதலில் HAMMER ஏவுகணைகளை வாங்கியது. ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள கடினமான மலை இடுக்குகளிலும், பதுங்கு குழிகளிலும் ஒளிந்திருந்த பயங்கரவாத முகாம்களைத் தகர்க்க இந்திய ராணுவம் ரஃபேல் விமானங்கள் மூலம் HAMMER ஏவுகணைகளை ஏவியது.
HAMMER ஏவுகணையின் 70 கிலோ மீட்டர் தூரம் வரை பாயும் திறன் காரணமாக, இந்திய விமானங்கள் சர்வதேச எல்லையைத் தாண்டாமலேயே, பாதுகாப்பான தூரத்தில் இருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க முடிந்தது.செங்குத்தாக வந்து விழும் இதன் வேகம், கான்கிரீட் அரண்களைத் துளைத்து உள்ளே இருந்த பயங்கரவாதிகள் அழித்தது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகுதான், இந்திய விமானப்படை HAMMER ஏவுகணையின் சக்தியை முழுமையாக உணர்ந்து, இதை அதிக எண்ணிக்கையில் வாங்கவும், இந்தியாவிலேயே தயாரிக்கவும் முடிவு செய்தது.


