Last Updated:
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பாவான் இம்ரான் கானுக்கு மனிதாபிமான அடிப்படையில், சிகிச்சை அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு, சுனில் கவாஸ்கர், கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானுக்கு பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், கிரெக் சேப்பல், இயன் சேப்பல், பெலின்டா கிளார்க், ஆலன் பார்டர், டேவிட் கோவர், நாசர் ஹூசைன், கிளைவ் லாயிட், ஸ்டீவ் வாவ், ஜான் ரைட் உள்ளிட்டோர் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், இம்ரான் கான் விரும்பும் மருத்துவர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு சர்வதேச தரத்திலான வசதிகள் செய்து தரவும், அவரது குடும்பத்தினரை சந்திக்கவும் அனுமதி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 3-4 மாதங்களாக இம்ரான் கானுக்கு பார்வை மங்கலாகத் தெரிவதாகவும், சிறை நிர்வாகத்திடம் கூறியும் வெறும் கண் சொட்டு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் சல்மான் சப்தார் குற்றம் சாட்டினார். தனது வலது கண்ணில் வெறும் 15 சதவீத பார்வை மட்டுமே எஞ்சியிருப்பதாக இம்ரான் கான் முறையிட்டார். இம்ரான் கானின் மகன் காசிம், தனது தந்தை கண் பார்வை இழக்க பாகிஸ்தான் அரசும் ராணுவமுமே காரணம் என்று கூறியுள்ளார். 900 நாட்களுக்கும் மேலான தனிமைச் சிறை மற்றும் மருத்துவப் புறக்கணிப்பே இதற்குக் காரணம் என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், வழக்கறிஞர்களைச் சந்திப்பதற்கும், அவருக்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்வதற்கும் இம்ரான் கானுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


