Last Updated:
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது மனைவி சுனேத்ரா பவார் கோரிக்கை வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் விமான விபத்தில் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது மனைவி சுனேத்ரா பவார் அம்மாநில முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துவந்தவர் அஜித் பவார். இவர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி பகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் சென்றார். அப்போது பாராமதியில் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பரிதாபமாக அஜித் பவார் பலியானார்.
இந்தச் சம்பவம் இந்தியா முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியை யார் ஏற்பார்? அடுத்த துணை முதலமைச்சர் யார் எனும் கேள்விகளும் எழுந்தன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அஜித் பவாரின் மனைவி, சுனேத்ரா பவாரைச் சந்தித்து அவரை, கட்சியின் தலைவராக பதவி ஏற்க அழைப்பு விடுத்தனர். அதேபோல், மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, அஜித் பவாரின் மனைவி, சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, மும்பை லோக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், சுனேத்ரா பவாருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரான சுனேத்ரா பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து, அஜித் பவார் விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

