Last Updated:
உச்சநீதிமன்றம், நாகரத்னா மற்றும் உஜ்ஜல் பூயான் தலைமையில், மேட்ரிமோனி இணையதளம் வழி ஏற்பட்ட திருமணத்துக்கு முன் உறவு வழக்கை மத்தியஸ்தம் பரிந்துரைத்து ஒத்திவைத்தது.
திருமணத்திற்கு முன், ஒரு ஆணும், பெண்ணும் அந்நியர்கள் என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், திருமணத்திற்கு முந்தைய உறவு குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளது.
30 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட இளைஞரின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் பூயான் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், மேட்ரிமோனி இணையதளம் மூலம் அறிமுகமான இளைஞர் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி டெல்லி மற்றும் துபாய்க்கு அழைத்துச் சென்று உறவில் இருந்ததாகவும், அதன்பின் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகரத்னா, ஒரு ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பு எப்படி உறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிடுவதாக கவலை தெரிவித்தார். ஒருவேளை நாம் பழங்காலத்தவர்களாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதி, திருமணத்திற்கு முன்பு யாரும் யாரையும் நம்பக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருந்த நிலையில், விசாரித்து தண்டிக்கப்பட வேண்டிய வழக்கு இது அல்ல என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு பரிந்துரைக்கலாம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


