Last Updated:
IND vs PAK | டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் 8வது முறையாக தோல்வி கண்டதை அடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் 8வது முறையாக தோல்வி கண்டதை அடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக விளையாட முதலில் தயங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல வாரங்களுக்குப் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு களமிறங்கியது. கடினமான பிரேமதாசா மைதானத்தில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
சல்மான் ஆகா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டு அபிஷேக் சர்மாவை அவுட் செய்தாலும், அந்த ஆதிக்கம் நீடிக்கவில்லை. ஆனால், திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த அவர், அரைசதம் கடந்து 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். கடைசி கட்ட ஓவரில் ஷிவம் துபே ஓரளவு அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபிர்ஹான், ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுக்க, பும்ரா 2ஆவது ஓவரின் 2ஆவது மற்றும் கடைசி பந்தில் சயிம் அயூப், சல்மான் ஆகா ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார்.
5ஆவது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பாபர் அசாமை அக்சர் படேல் வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அதில் இருந்து மீள முடியாத பாகிஸ்தான் அணி, 18 ஓவர்களில் 114 ரன்களில் சுருண்டது. இதில் சிறப்பாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா, பும்ரா, அக்சல் படேல், வருண் சக்கரவர்த்தி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த இந்திய அணி, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்றது.
பாகிஸ்தான் அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஆட்டம் முடிவதற்கு முன்பே மைதானத்தை விட்டு வெளியேறினார். 12-வது ஓவரில் முகமது நவாஸ் ஆட்டமிழந்தவுடன் அவர் காரில் ஏறிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைக்கண்ட ரசிகர்கள், தோல்வியைத் தாங்க முடியாமல் அவர் ‘ஓடிவிட்டார்’ என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவராக அறியப்படும் நக்வி, கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியவர். இந்த முறை இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவை மாற்றியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. மைதானத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவைச் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டாலும், இருவரும் ஒன்றாகக் காணப்படவில்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Feb 16, 2026 11:33 AM IST


