Last Updated:
பிகாரில் சிறை உதவி கண்காணிப்பாளரின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் சிறை உதவி கண்காணிப்பாளரின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் கணவரின் குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா?
பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் ஷெர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்து சவுத்ரி. இவருக்கு, கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்வேதா குமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நத்து சவுத்ரி தர்பங்கா சிறையில் உதவி கண்காணிப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெண் வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே விரைந்து வந்த ஸ்வேதாவின் பெற்றோர், சடலமாக கிடந்த மகளை பார்த்து கதறி அழுது துடித்துள்ளனர்.
மேலும், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். திருமணத்தின் போது நகைகள், ரொக்கப் பணம், கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவரின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து வரதட்சணை கொடுமைப் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிலும், அண்மைக் காலமாக பணம் மற்றும் ஃபார்ச்சூனர் சொகுசு கார் வாங்கி வர கூறி ஸ்வேதாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைதியாக இருந்த சிறை உதவி கண்காணிப்பாளர், சில நாட்களிலேயே கட்டிய மனைவியை சிறை கைதி போன்று அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த சூழலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்வேதா குமாரியை அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை கயிற்றில் கட்டி தொங்கவிட்டதாக பெண் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடற்கூராய்வு முடிவு வந்த பின்னர் தான் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஸ்வேதாவின் கணவர் போலீஸ் அதிகாரி என்பதால் உண்மையை மூடி மறைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமணமான மூன்று ஆண்டுகளில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் உள்ள மர்மம் விலகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


