தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தை திறமையாகக் கடற்கரையில் தரையிறக்கிய விமானியை சோமாலியாவில் உள்ள விமான நிறுவனம் பாராட்டியுள்ளது.
ஐந்து பணியாளர்கள் மற்றும் 50 பயணிகளுடன் பயணித்த இந்த விமானம், தலைநகர் மொகாடிஷுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் தப்பியுள்ளனர்.
மொகாடிஷுவிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட ஃபோக்கர் 50 (Fokker 50) வகை விமானத்தில் மேலெழுந்த சில நேரங்களுக்குப் பிறகு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமான பணியாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து விமானத்தை மீண்டும் திருப்பிக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டதாக சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
விமானம் முதலில் ஓடுபாதையில் தரையிறங்கியபோதிலும், பின்னர் ஓடுபாதையைத் தாண்டி அருகிலுள்ள கடற்கரையில் சென்று நின்றதாக அந்த ஆணையத்தின் இயக்குநர் அஹ்மத் மாகாலின் ஹசன் தெரிவித்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட கோளாறின் தன்மை குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தியப் பெருங்கடல் கடற்கரையில் நின்ற விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக இறங்கி நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் பதிவாகியுள்ளன. விமானத்தில் இருந்தவர்களில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

