Last Updated:
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பெண் ஒருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் சந்தையில் கடை போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி, அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பலர் முன்னிலையில் பெண் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமாசிங். இவர் பஹ்ரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பன்வார் கிராமத்தில் நடைபெற்றுவந்த சந்தையில் கடந்த 8 வருடங்களாக ஒரு காய்கறிக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அவர் கடை போட்ட பகுதிக்கு சந்தோஷ் பதக் என்பவர் திடீரென வந்து சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். அந்த இடத்தில், ஹேமா கடை போடக்கூடாது என்றும், அது தன்னுடைய பகுதி என்றும் கூறி தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு வந்த சந்தோஷ் பதக் ஹேமா சிங்கிடம் தகராறில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். அன்று இரவு அவரது கடையை அடித்து உடைத்த அவர், பொருட்களையும் நாசம் செய்ததாகக் கூறப்படுகிறது. அது குறித்து காவல் நிலையத்தில் ஹேமா புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தோஷ் பதக்கும், அவரது நண்பர் ராகுல் திவிவேதி என்பவரும் ஹேமாசிங் கடைக்கு மீண்டும் வந்துள்ளனர். கடையை காலி செய்வது குறித்து அவர்களுக்குள் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இந்தமுறை பொங்கியெழுந்த ஹேமா, தனது செருப்பை கழற்றி சந்தோஷ் பதக் மீது சரமாரியாக அடிக்கப் பாய்ந்துள்ளார். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய சந்தோஷ் அருகில் கிடந்த கம்பு ஒன்றை எடுத்து, பெண் என்றும் பாராமல் ஹேமாவை சரமாரியாக வெளுத்தெடுத்திருக்கிறார். இவர்களது மோதலால் அந்த பகுதியே சற்று நேரம் பதற்றமாக காணப்பட்டது. பெண் ஒருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்டதால் இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


