
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் பாடசாலை மற்றும் அருகிலுள்ள வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். டம்ப்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பாடசாலையில் நடந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும், இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் அருகிலுள்ள ஒரு வீட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாடசாலையில் 7 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 175 மாணவர்கள் உள்ளதாக மாகாண அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இரு நிமிடங்களுக்குள் பாடசாலையை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டிருக்கலாம் என காவல்துறை கூறியுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், உயிரிழந்தவர்கள் மற்றும் சந்தேக நபருக்கிடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த துயர சம்பவம் முழு சமூகத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக டம்ப்ளர் ரிட்ஜ் மேயர் தெரிவித்துள்ளார். கனடா பிரதமரும் இந்த சம்பவம் நாட்டை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் திட்டமிட்டிருந்த வெளிநாட்டு பயணத்தையும் ஒத்திவைத்துள்ளார்.
கனடாவில் பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மிகவும் அரிதாக நடைபெறும் நிலையில், இந்த சம்பவம் சமீப காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

