தெமர்லோ, பிப்ரவரி 10, 2026:
மெந்தகாப், பிளாட் டாமாய் தாஹா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு சாக்கடையில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆடைகளை வைத்து அது ஒரு பெண்ணின் எலும்புக்கூடாக இருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் வேளையில், அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் சாக்கடைக்குள் எலும்புக்கூடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் எந்தவித அடையாள ஆவணங்களும் (Identity documents) கிடைக்கவில்லை. இருப்பினும், அங்கு மீட்கப்பட்ட எஞ்சிய துணிகளை வைத்து இது ஒரு பெண்ணுடையது என முதற்கட்டமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் முகமட் நசீம் பஹ்ரோன் கூறினார்.
தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சான்றுகளைச் சேகரித்துள்ளனர். நீண்ட நாட்களாக உடல் அங்கு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது என்றும், எலும்புக்கூடு இன்று (பிப். 10) சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
தற்போது இது ‘திடீர் மரணம்’ (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இதில் ஏதேனும் குற்றவியல் பின்னணி உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.
உங்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாராவது காணாமல் போயிருந்தால் அல்லது இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது விசாரணை அதிகாரி ஆய்வாளர் முகமது ராஸி இஸ்மாயிலை (Insp Mohd Razzi Ismail) +6017-231 4245 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post மெந்தகாப்பில் புதர்கள் மண்டிய சாக்கடையில் பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

