Last Updated:
கான்பூர் தனியார் வங்கியில் ஆஸ்தா சிங் சாதி குறித்து ஆவேசமாக பேசிய வீடியோ வைரல், பலர் கண்டனம், ஆஸ்தா விளக்கம், வங்கி பதில் இல்லை.
உத்தரபிரதேசத்தில், வங்கியில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் தனது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு ஆவேசமாக பேசிய வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து, பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் வங்கி இயங்கி வருகிறது. வங்கி ஊழியராக ஆஸ்தா சிங் வழக்கம் போல் தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாடிக்கையாளர் ஒருவருடன் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் மோதலாக வெடித்து கடுமையான வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தார் ஆஸ்தா. ஒரு கட்டத்தில் தனது சாதியை சொல்லி, “நான் ஒரு தாக்கூர்” என்று திரும்ப திரும்ப கூறி “என்னிடம் பிரச்சனை செய்யாதே” என்று கண்களால் எச்சரித்துள்ளார்.
மேலும், ஆங்காங்கே ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தி கடுமையாகப் பேசியுள்ளார். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில், உடன் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் தலையிட்டு அவரை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் இனி யார் தடுத்தாலும் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்று முடிவெடுத்த அந்த பெண், அருகில் இருந்த லேப்டாப்பை தூக்கி அடிக்க முயன்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் ஆஸ்தாவின் அந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பலர் ஊழியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தனியார் வங்கி சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்த ஆரம்பித்தனர். ஆனால் எதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனியார் வங்கி தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட பெண் தனது விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு பக்கத்தை மட்டுமே நீங்கள் பார்த்து விட்டு கருத்து கூறுகிறீர்கள், மற்றொரு பக்க கதையும் கவனிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அந்த வீடியோ கடந்த ஜனவரி 6ம் தேதி எடுக்கப்பட்டது என்றும், அதில் எந்த வாடிக்கையாளருடனும் தான் வாக்குவாதம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தங்கள் வங்கியில் பணியாற்றிய ஒரு பெண்ணைச் சேர்ந்தது என்றும் குறிப்பட்டுள்ள ஆஸ்தா, அந்த பெண்ணின் கணவருடன் தனக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த சம்பவத்தை தவறாக புரிந்து கொண்டு வாடிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்டதுபோல் சித்தரிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப் பட்ட பெண்ணின் கணவர், தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், “நீ எந்த சாதி என கேள்வி எழுப்பி, உன் அகம்பாவத்தை அடக்கி விடுவேன்” என அவதூறு வார்த்தைகளால் தகராறு செய்ததாகவும் ஆஸ்தா தெரிவித்துள்ளார். அதற்குப் பிறகுதான் தான் தனது சாதி பற்றி கூறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். நான் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானவை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்ட ஆஸ்தா, யாராவது என்னிடம் வந்து, “உன்னுடைய திமிரை நான் அடக்கிவிடுவேன்” என்று சொன்னால், அதை நான் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
கடைசியாக “நான் ஒரு தாக்கூர்” என்று கூறிய கருத்தில் இன்றும் நிலைத்திருக்கிறேன். நான் ஒரு தாக்கூர்; அதில் எனக்கு பெருமை உள்ளது என்று கூறி பெருமிதத்துடன் அந்த வீடியோவை முடித்துள்ளார் ஆஸ்தா. சாதி பற்றிபேசியது தவறுதான் ஆனால் தான் இந்த சாதி என்பதில் பெருமை படுகிறேன் என்று ஆஸ்தா பேசியிருப்பது மீண்டும் வைரலாகி வருகிறது.
சாதி பெயரை குறிப்பிட்டு ஆவேசமாக பேசிய இளம்பெண்.. வைரல் வீடியோவால் இணையத்தில் வலுத்த எதிர்ப்பு!


