Last Updated:
மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை கிரண் ரிஜிஜூ வெளியிட்டு, அவர்களின் நடத்தையை விமர்சித்து, பாஜக நாடாளுமன்ற கண்ணியத்தை பாதுகாப்பதாக கூறினார்.
மக்களவையில் பிரதமரின் இருக்கையை சூழ்ந்துகொண்டு காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்டம் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தங்களது எம்.பி.க்களின் இழிவான நடத்தையைப் பற்றி காங்கிரஸ் பெருமைப்படுவதாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் கடந்த நான்காம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து, “சரியானதைச் செய்யுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி முழக்கமிட்டனர்.
இதனால், பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, அவை நடவடிக்கையை ஒத்திவைத்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததாகவும் சபாநாயகர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த காங்கிரஸ், பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்வதற்கு பயப்படுவதால்தான் அவரது உரை ரத்து செய்யப்பட்டதாக விமர்சித்தது.
இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பதாகைகளுடன் போராடியதன் வீடியோ காட்சியை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி தங்களது எம்.பி.க்களின் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்வதாகவும் சாடியுள்ளார்.
Congress Party is proud of the most degrading behavior by their MPs !! If we had not stopped all BJP MPs and allowed the Women MPs to confront Cong. MPs, it would have led to very ugly scene.
We have very high consideration, to protect the dignity & sanctity of the Parliament. https://t.co/tRj5HjLKFH pic.twitter.com/aTmktk4Y7E
— Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2026
பாஜக பெண் எம்.பி.க்களை தடுத்து நிறுத்தாமல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்களை எதிர்கொள்ள அனுமதித்திருந்தால் அருவருக்கத்தக்க சம்பவத்திற்கு வழிவகுத்திருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறையுடன் இருப்பதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


