Last Updated:
Rahul Gandhi | டெல்லியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
தமிழக காங்கிரஸில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக இரண்டரை மாதங்களுக்கு முன்பே குழு அமைத்துள்ளது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் அணிவகுத்ததைப் போன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களும் அணிவகுக்க வேண்டும் என்றும் திமுக தலைமையிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட 76 மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
நெருங்கும் தேர்தல்… தமிழக காங்கிரசின் புதிய நிர்வாகிகளை டெல்லியில் சந்தித்த ராகுல்காந்தி… பின்னணி என்ன?


