தம்பூனான், பிப்ரவரி 10, 2026:
சபா, தம்பூனான் மாவட்டத்தில் உள்ள கம்போங் பாடாவ் (Kampung Patau) பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில் குடியிருப்பு பகுதியில் திடீரெனத் தீப்பிடித்தது என்றும், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, வீட்டின் படுக்கையறை ஒன்றிலிருந்து சிறுமியின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தீயிலிருந்து தப்பிக்க முயன்ற 31 வயது பெண் ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று, தம்பூனான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் மிட்செல் பிரான்சிஸ் ஜார்ஜ் கூறினார்.
அதிகாலை 4:08 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனடியாக 16 கி.மீ தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு 8 வீரர்கள் கொண்ட குழு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தில் இரண்டு வீடுகள் மற்றும் மூன்று வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
சிறுமியின் உடல் மேலதிக விசாரணைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காலை 7:00 மணியளவில் தீயணைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




