Last Updated:
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கவுரவ் கோகாய் மற்றும் அவரது மனைவி எலிசபெத் ஆகியோருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் மீது அசாம் முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் அவரது மனைவியின் பாகிஸ்தானிய தொடர்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்று அசாம் மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவரான கவுரவ் கோகாய் மற்றும் அவரது மனைவியும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவருமான எலிசபெத் ஆகியோர் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க அசாம் அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் இளைஞர் ஒருவருடன் பாகிஸ்தான் தூதரகம் சென்றதாகவும், மத்திய அரசுக்கு தெரியாமல் அவர் சென்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
கவுரவ் கோகாயின் மனைவி எலிசபெத் பாகிஸ்தானில் 2011 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பணியாற்றியதும், இந்தியா குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்று காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் விளக்கமளித்துள்ளார். அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் எம்.பி. மீது முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வைத்துள்ள குற்றச்சாட்டால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


