Last Updated:
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் மம்தா பானர்ஜி மனு, உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 19 வரை அவகாசம் நீட்டித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை உத்தரவு.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க பிப்ரவரி 19 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. இதில் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி,ஆளும் மத்திய பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் கைப்பாவையாக செயல்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நசுக்கப்படும் ஜனநாயகத்தை காக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த மம்தா, தானே வழக்கறிஞராகவும் ஆஜராக வாதாடினார். அந்த விசாரணை திங்கள்கிழமை தொடர்ந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த ஆட்சேபணைகளுக்கான அவகாசத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இத்துடன், மாநில அரசின் 8,505 அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் அந்தந்த மாவட்டத்தில் நேரில் செல்ல வேண்டும் என்றும் அவர்களில் ஈஆர்ஓ-வாக பணியாற்றத் தகுதியுடையோரை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வன்முறை புகார்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்கம் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


