Last Updated:
போட்டியின்போது மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல காவலர்கள் அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
சேப்பாக்கம் மைதானத்தில் விசில் எடுத்துச் செல்ல தடை என்ற தகவல் பரவிய நிலையில், அதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அது என்ன?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் ஆறு லீக் போட்டிகள் உட்பட 7 போட்டிகள் நடைபெறும் நிலையில், முதல் போட்டியில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியின்போது மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல காவலர்கள் அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. டிக்கெட்டுடன் இணைந்து வரக்கூடிய அறிவுறுத்தலில், அதிக ஒலி எழுப்பக்கூடிய பொருட்கள் தடை செய்யப்பட்டதாகவும், அதில் விசில் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தை நிர்வகிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளை நியூஸ் 18 தமிழ்நாடு தொடர்பு கொண்டபோது, விசில் எடுத்து வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும், மைதான காவலர்களால் ரசிகர்களிடமிருந்து விசில் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது.
மேலும், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்தும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், கேமரா, ட்ரோன் உள்ளிட்ட 17 பொருட்கள் இடம்பெற்றுள்ள நிலையில், விசில் குறிப்பிடப்படவில்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


