
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற குழு பி போட்டியில் அயர்லாந்தை இலங்கை வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்தின் அணித்தலைவர் போல் ஸ்டேர்லிங்க், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, குசல் மென்டிஸின் ஆட்டமிழக்காத 56 (43), கமிந்து மென்டிஸின் 44 (19) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜோர்ஜ் டொக்ரல் 4-0-17-2, கரெத் டெலனி 4-0-24-1, மார்க் அடைர் 4-0-33-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 164 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, மகேஷ் தீக்ஷன (3), வனிது ஹசரங்க (3), டுனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரணவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களையே பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக கமிந்து மென்டிஸ் தெரிவானார்.

