Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருப்பதால் அதன் பிராண்ட் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஐபிஎல் நடப்பு சாம்பியன் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்குவதற்கு பிரபல கால்பந்தாட்ட அணி நிர்வாகம் போட்டி போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 18-வது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பட்டத்தை அணி முதல் முறையாக வென்ற நிலையில், அதன் பின்னர் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது நடந்த நெரிசல் சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஆர்சிபி அணியை தற்போதைய உரிமையாளர்கள் விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் பரவின. இதனை வாங்குவதற்கு பல்வேறு முன்னணி நிர்வாகங்கள் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவின் அதானி குழுமம், ஆதார் பூனவல்லா, ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் ஜிண்டால் உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்கள் ஆர்சிபி அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது அந்த அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருப்பதால் அதன் பிராண்ட் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
தற்போது ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு சுமார் 17 ஆயிரத்து 762 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல கால்பந்தாட்ட அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகம் ஆர்சிபி அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த அணியின் உரிமையாளர் அவிராம் கிளேசர் சுமார் 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை கொடுத்து ஆர்சிபி அணியை வாங்குவதற்கு முன் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

