Last Updated:
U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வே நாட்டின் ஹராரேவில் நடைபெறும் ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
16 அணிகள் மோதும் யு19 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகளில் இருந்து 12 அணிகள் சூப்பர் 6 பிரிவுகளுக்கு முன்னேறின. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 2ஆவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 41.1 ஓவர்களில் இலக்கை எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதனிடையே இறுதிப்போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வே நாட்டின் ஹராரேவில் நடைபெறும் ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேநேரம், தொடக்க ஆட்டக்காரர் சூர்யவன்ஷி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். பந்தை நாலாபுறமும் சிதறடித்த அவர், சதம் அடித்தார். தொடர்ந்து, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்த வன்ஷி, 175 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டமிழந்தார். 80 பந்துகளை எதிர்கொண்ட அவர், 15 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷி அவுட் ஆகும்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 26வது ஓவர் நடந்துகொண்டிருந்தது. அதன்பிறகான 24 ஓவர்களில் இந்திய அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது. விக்கெட்டும் மளமளவென விழுந்தது. இதனால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது. கோப்பை வெல்ல இங்கிலாந்து அணிக்கு 412 ரன்கள் என்கிற மெகா இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


