Last Updated:
“பாதுகாப்பு இல்லாத சூழல் அல்ல மோடியின் பயம். எதிரி நாடு நம்மை தாக்கும்போது, பயந்து நடுங்கி முடிவெடுக்க முடியாமல் வலிமையற்ற பிரதமர் தான் என்பதே அவருக்கு அச்சம்” என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
“பாதுகாப்பு இல்லாத சூழல் அல்ல மோடியின் பயம். எதிரி நாடு நம்மை தாக்கும்போது, பயந்து நடுங்கி முடிவெடுக்க முடியாமல் வலிமையற்ற பிரதமர் தான் என்பதே அவருக்கு அச்சம்” என நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டி அளித்த எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசுவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி உரையில்லாமலே மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (5ஆம் தேதி) நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுவார் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சியினர் தாக்க இருந்ததாக தனக்கு தகவல் கிடைத்ததால் அவரை அவைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்துள்ளார்.
இன்று அவையை ஒத்திவைப்பதற்கு முன் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “நேற்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி எப்படிச் சென்றார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள். பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. தவறாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதாலேயே பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என கூறினேன்” எனத் தெரிவித்தார்.
குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் தாக்க சதி திட்டம் போட்டிருப்பதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டி அளித்த எம்.பி. ஜோதிமணி, “வன்முறையை விரும்பாதது காங்கிரஸ் இயக்கம். இல்லாத பிரதமரை எப்படி தாக்க முடியும். கடந்த சில தினங்களாக முன்னாள் ராணுவ தளபதி தனது புத்தகத்தில் சொல்லியுள்ள விஷயம், அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முற்படுகிறார். ஆனால், அமைச்சர்களும், பாஜக எம்.பி.க்களும் அவரை பேசவிடாமல் தடுக்கின்றனர்.
பயத்தின் காரணமாக பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. அதனை மறைப்பதற்காக பாஜக இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பார்த்து ஏன் அச்சமடைகிறார். பாதுகாப்பு இல்லாத சூழல் அல்ல மோடியின் பயம். எதிரி நாடு நம்மை தாக்கும்போது, பயந்து நடுங்கி முடிவெடுக்க முடியாமல் வலிமையற்ற பிரதமர் தான் என்பதே அவருக்கு அச்சம். நாங்கள் பேசிய உண்மை அவரை சுடுகிறது. சபாநாயகர் சொல்லியுள்ள குற்றச்சாட்டு அபத்தமானது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


