Last Updated:
பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாகவும், அதன் காரணமாகவே அவைக்கு அவரை வரவேண்டாம் என தான் கூறியதாகவும் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்துவந்தது. இதற்கிடையில், அமெரிக்கா – இந்தியா இடையே வரி குறைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தும், முன்னாள் ராணுவ தளபதி நரவனேவின் புத்தகத்தில் இருக்கும் சில விஷயங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தார். இந்த இரண்டு விவகாரங்களின் காரணமாக கடந்த சில தினங்களாக நாடாளுமன்றம் முடங்கிவருகிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசுவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி உரையில்லாமலே மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (5ஆம் தேதி) நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுவார் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சியினர் தாக்க இருந்ததாக தனக்கு தகவல் கிடைத்ததால் அவரை அவைக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்துள்ளார்.
இன்று அவையை ஒத்திவைப்பதற்கு முன் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “நேற்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி எப்படிச் சென்றார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள். பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. தவறாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதாலேயே பிரதமரை அவைக்கு வரவேண்டாம் எனக் கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. பிரியங்கா காந்தி, “சபாநாயகருக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்துகொள்கிறார். நேற்று, மூன்று பெண்கள் இருக்கைக்கு முன்னால் நின்றதால், அவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லை. இது என்ன முட்டாள்தனம்? விவாதம் நடத்த அரசு விரும்பாததால், எந்த விவாதமும் நடைபெறவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி..” – ஓம் பிர்லா சொன்ன பரபரப்பு தகவல்


