ஜார்ஜ் டவுன்:
பினாங்கின் தாசெக் குளுகோர் மற்றும் பட்டர்வொர்த் பகுதிகளில் நிகழ்ந்த இரு விபத்துகள் குறித்து மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல் சம்பவத்தில், இன்று காலை 8.42 மணியளவில் தாசெக் குளுகோரில் மோட்டார் சைக்கிள் – லோரி என்பன மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மியன்மார் நாட்டவர் பயணம் செய்தனர். இதில் இரு 10 வயது சிறுவர்கள் மற்றும் ஒரு 5 வயது சிறுமி உட்பட நால்வரும் காயமடைந்தனர்.
ஒரு சிறுவனுக்கு முகத்தில் காயம் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த ஒருவர் கெப்பாலா பத்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 66 வயது லோரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
அதேநேரம் நேற்று அதிகாலை 3.16 மணி பட்டர்வொர்த் பகுதியில் கார் – கன்டெய்னர் லோரி மோதியதில், சுங்கை லோகன் தொழில்துறை பகுதியில், புரோட்டான் X50 ரக கார் ஒன்று வோல்வோ கன்டெய்னர் லோரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரின் ஓட்டுநர் இரும்பு இடுக்குகளுக்குள் சிக்கிக்கொண்டார். சுமார் 5.04 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் 41 வயது மதிக்கத்தக்க நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.




