Last Updated:
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணையில் மாநில முதலமைச்சர் ஆஜராகி வாதிட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களோடு சேர்ந்து மொத்தம் 12 மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொண்டுவருகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆறு கடிதம் எழுதியும் தங்களுக்கு பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசு தரப்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆஜராகி வாதிட்டார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணையில் மாநில முதலமைச்சர் ஆஜராகி வாதிட்டார்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளால் ஏறக்குறைய ஒரு கோடியே 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு கோடியே 34 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ஒருவர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்த தரவுகளை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை என மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
சுமார் 63 லட்சம் நபர்களின் பெயர் சேர்ப்பு அல்லது நீக்குதல் தொடர்பான முடிவு நிலுவையில் உள்ள நிலையில், எஞ்சியுள்ள 4 நாட்களில் நாளொன்றுக்கு 15 லட்சம் பேரின் மனு குறித்து முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி கூறினார்.
இது தொடர்பாக 6 முறை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்திற்கு நீதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இரண்டு நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்த மம்தா பானர்ஜி, மக்களின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
“எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது” – எஸ்.ஐ.ஆர். வழக்கில் மம்தா பானர்ஜி ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் வாதம்


