ஜோகூர், பிப்ரவரி 4:
ஜோகூர், பத்து பாஹாட்டில் உள்ள கம்போங் சொலோக் வான் மோ பகுதியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த ஒரு பெரும் தீ விபத்தில் நான்கு வீடுகள் முற்றிலும் சாம்பலாகின.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முகமட் நோர்ஷாம் பிபின் என்பவரது குடும்பத்தினர், ஒரு தெருப்பூனையின் எதிர்பாராத செயலால் மயிரிழையில் உயிர் தப்பினர். அதிகாலை வேளையில் வீட்டிற்குள் புகுந்த பூனை ஒன்று, மேசையிலிருந்த மீனைத் திருடிக்கொண்டு ஓடியுள்ளது.
அதனை விரட்டுவதற்காக நோர்ஷாம் கண்விழித்து வெளியே வந்தபோது, அண்டை வீடுகள் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகச் செயல்பட்ட அவர், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் பாதுகாப்பாக வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தார். பூனை மீனைத் திருடியது ஒரு விபத்தாகத் தெரிந்தாலும், அதுவே அக்குடும்பத்தினர் தீயிலிருந்து தப்பிக்கக் காரணமாக அமைந்தது. ‘இறைவனின் தூதுவனாக’ வந்து அந்தப் பூனை தங்கள் உயிரைக் காப்பாற்றியதாக நோர்ஷாம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் காலை 9.20 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், நான்கு வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாகின. பொருளிழப்பு அதிகமாக இருந்தாலும், அந்த வாயில்லா ஜீவனின் செயலால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




