Last Updated:
ஏர் இந்தியா போயிங் 787-8 விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் பிரச்சினை இயந்திர கோளாறு அல்ல, தவறான இயக்கம் காரணம் என டிஜிசிஏ விளக்கம்.
ஏர் இந்தியா போயிங் 787-8 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் பிரச்சினை ஏற்பட்டதற்கு இயந்திர கோளாறு காரணம் அல்ல என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.
லண்டனில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக டிஜிசிஏ விளக்கம் அளித்துள்ளது. அதில், லண்டனில் விமான எஞ்சினை ஸ்டார்ட் செய்தபோது எரிப்பொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்-ஐ விமான குழு ஆன் செய்ய முயன்றும், அது சரியான நிலைக்கு வரவில்லை என்றும் 3ஆவது முயற்சியில் தான் அந்த சுவிட்ச் RUN நிலையில் சரியாக நின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், சோதனை செய்ததில் சுவிட்ச் தொடர்ந்து சரியான நிலையில் இருந்ததை விமான குழுவினர் உறுதி செய்தது விசாரணையில் தெரியவந்ததாக டிஜிசிஏ அறிவித்துள்ளது. பிறகு அந்த சுவிட்ச்-ஐ யாரும் தொடவில்லை என விமான குழுவினர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் தரையிறங்கியதும் இதுகுறித்து விமான குழு தெரிவித்ததையடுத்து, போயிங் நிறுவனத்தின் வழிகாட்டுதலை ஏர் இந்தியா நிறுவனம் நாடியது.
போயிங் நிறுவனம் கூறியபடி அந்த விமானத்தின் எரிப்பொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் டிஜிசிஏ அதிகாரிகள் முன்பு சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சுவிட்ச்சில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தவறான முறையில் அதனை அசைத்ததால் தான் கோளாறு ஏற்பட்டு கட்ஆப் நிலைக்கு சென்றது என்பதும் சோதனையில் தெரியவந்ததாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா எரிபொருள் சுவிட்ச் பிரச்னை: இயந்திர கோளாறு காரணம் இல்லை.. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம்!


