Last Updated:
அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங் போன்ற பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு வலுவாக உணரப்பட்டது.
மியான்மர் நாட்டை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரை அதிரச் செய்ததால் பெரும் பதற்றம் காணப்படுகிறது.
மியான்மர் நாட்டில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.9 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் அக்யாப் நகருக்கு கிழக்கே சுமார் 70 மைல் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மியான்மரில் கடந்த 71 மணி நேரத்தில் உணரப்பட்ட மூன்றாவது நில அதிர்வு இதுவாகும்.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன. உயரமான கட்டிடங்கள் லேசாகக் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதேபோல், அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங் போன்ற பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு வலுவாக உணரப்பட்டது. டாக்காவில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.
இன்று அதிகாலை ஏற்கனவே வங்கதேசத்தின் சில பகுதிகளில் 4.1 ரிக்டர் அளவில் ஒரு சிறிய நில அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில், மியான்மர் நிலநடுக்கம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கத்தால் கொல்கத்தா அல்லது டாக்காவில் பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது கட்டிட பாதிப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
Kolkata | மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கொல்கத்தா நகரைக் குலுக்கிய அதிர்வுகள் – பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்!


