Last Updated:
இந்தியா மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரி, 18 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, டொனால்டு டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் உலக அமைதி, மற்றும் செழிப்புக்கு டிரம்ப்பின் தலைமை மிகவும் முக்கியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் தற்போது இறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ள பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் மிக முக்கிய தகவலை டிரம்ப் பகிர்ந்துள்ளார். இனிமேல், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருக்கும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் உதவும் எனவும் டிரம்ப் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி துறை ஒப்பந்தங்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அமெரிக்கா மீதான வரிகளைக் குறைக்க இந்தியாவும் முன்வரும் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியா மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரி, 18 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, டொனால்டு டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், உலக அமைதி, மற்றும் செழிப்புக்கு டிரம்ப்பின் தலைமை மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப்பின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம், இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வணிகம் மேலும் செழிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல இந்த ஒப்பந்தம், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு இதுவரை இல்லாத பல வாய்ப்புகளை வழங்கும் என இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல என கூறியுள்ள அவர், இது இந்திய-அமெரிக்க உறவுகளை மறுவடிவமைப்பு செய்யும் என குறிப்பிட்டுள்ளார். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் விரைவுபடுத்தும் ஓர் அம்சமாக இந்த ஒப்பந்தம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


