கோலாலம்பூர், பிப்ரவரி 3:
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் (Marco Rubio) அழைப்பை ஏற்று, வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறவுள்ள ‘அரிய வகை கனிமங்கள் குறித்த அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில்’ (Critical Minerals Ministerial) கலந்துகொள்ள டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் அமெரிக்கா செல்கிறார்.
மலேசியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துதல், குறிப்பாக கனிம வள ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல் போன்ற நோக்கங்களை நிறைவுசெய்யும் என்று நம்பப்படுகிறது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியை (Supply Chain) உறுதிப்படுத்தத் தேவையான முக்கியமான கனிமங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் கனிமத் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்து மற்ற நாடுகளின் அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
மின்னணு சாதனங்கள் (Smartphones), மின்சார வாகன பேட்டரிகள் (EV Batteries) மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய வகை மண் தனிமங்கள் (Rare Earth Elements) இதில் அடங்கும்.
2025 அக்டோபர் மாதம் மேம்படுத்தப்பட்ட ‘மலேசியா-அமெரிக்கா விரிவான மூலோபாயக் கூட்டாண்மை’ (Comprehensive Strategic Partnership) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைகிறது.
2025-ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் அமெரிக்கா இடையிலான மொத்த வர்த்தகம் 13% அதிகரித்து 367.47 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இதில் ஏற்றுமதி மட்டும் 17.2% வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின் மூலம், கனிம வளத் துறையில் மலேசியா ஒரு முக்கியமான சர்வதேசப் பங்குதாரராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




