காசா: ஐநா சார்பில் காசாவில் பணியாற்றிய இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியின் மரணத்துக்கான காரணம் குறித்த பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதத்தை எழுதி உள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காசாவை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லலப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா மீது போரை தொடங்கியது.
கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா நகர் அழிவின் விளிம்பில் உள்ளது. மொத்தம் 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் பல லட்சம் மக்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் மொத்த காசா நகரமே சிதைந்துவிட்டது. போரை நிறுத்த பல நாடுகள் கூறியபோதிலும் இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை. இதனால் மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு பல நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் தான் காசாவின் ரஃபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநாவில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வைபவ் அனில் காலே (வயது 46)கடந்த 13ம் தேதி கொல்லப்பட்டார்.
புனேவை சேர்ந்த இவர் ஐநாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி ரஃபா நகரில் ஐநா அடையாளம் பொறிக்கப்பட்ட காரில் இருந்தார். அப்போது அவரது கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வைபவ் அனில் காலே சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த மற்றொரு அதிகாரி படுகாயமடைந்தார். மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை ஒருங்கிணைக்கும பணிக்காக வைபவ் அனில் காலே சென்ற நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
இதுதொடர்பாக ஐநா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் தனி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் வைபவ் அனில் காலேவின் உடல் காசாவில் இருந்து புனேவுக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 17ம் தேதி குடும்பத்தினர் மற்றும் ராணுவ வீரர்கள் மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இதற்கிடையே தான் பாலஸ்தீனத்தின் பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‛‛வைபவ் அனில் காலேவின் உயிரிழப்புக்கு இஸ்ரேல் தான் காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதற்கான போரை இஸ்ரேல் தொடங்கி உள்ளது.
இதில் ஐநா பணியாளராக பணியாற்றி வந்த இந்திய ராணுவ அதிகாரி வைபவ் அனில் காலே இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் பயணித்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இது துரதிஷ்டவசமானது. அவருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவரின் குடும்பத்தினருடன் உள்ளது.


