தெஹ்ரான்,ஈரானில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் கொலை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், அணுஆயுத பயன்பாடு தொடர்பாக ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், ஈரானில் உள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் நகரில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், 14 பேர் காயமடைந்துள்ளனர். கேஸ் கசிவு காரணமாக இந்த வெடி விபத்து நடந்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளில், வெடி விபத்து நடந்த கட்டிடத்தில் இருந்து காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரை வெளியே தூக்கிச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியிருந்தது. ஆனால், அரசு சார்பில் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதே போல் ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள அஹ்வாஸ் நகரிலும் நேற்று வெடி விபத்து நடந்துள்ளது. அந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அங்கும் கேஸ் கசிவு காரணமாகவே விபத்து நடந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை பயிற்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த வெடி விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




