ஆண்டுதோறும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும், நாடாளுமன்றத்தில் இன்று மத்திய தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கமாக மூடப்பட்டிருக்கும் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இன்று செயல்படுகின்றன.
மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் இருந்து காலை 9 மணி அளவில் நிதி மற்றும் வர்த்தகச் செயலாளர்களுடன் புறப்படும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலில் குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். தொடர்ந்து, பிரதமர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டப் பிறகு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். காலை 11 மணியளவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிதியமைச்சர், சுமார் 2 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு விக்சித் பாரத் 2047 எனும் இலக்கை முன்வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டு பட்ஜெட்டில் ரயில்வே, உட்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, உற்பத்தித் துறை, வாகனத் துறை, பாதுகாப்புத் துறை, மின்னணு சாதனங்கள், எம்.எஸ்.எம்.இ., புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும், சுகாதாரம், சுற்றுலா, வேளாண்மை, லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளுக்கும் அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அந்த ஆண்டின் பட்ஜெட், அரசியல் களத்தை நிர்ணயிக்கும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக, 2021ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 1.03 லட்சம் கோடி மதிப்பிலான சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் மதுரை–கொல்லம் வழித்தடம் மற்றும் சித்தூர்–தாட்சூர் வழித்தடம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களும் அடங்கியிருந்தன.
நடப்பாண்டிலும் 5 மாநில தேர்தல் வருவதால் தேர்தலை மனதில் வைத்து புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், பட்ஜெட்டின் சில பகுதிகள் தமிழில் வாசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக தமிழ்நாடு விளங்குவதால், தொழில் வழித்தடங்கள், துறைமுக இணைப்புகள் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்புகளுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக பட்ஜெட் உரைகள் பகுதி ஏ, பகுதி பி என பிரிக்கப்பட்டிருக்கும். பகுதி ஏ-வில் அரசின் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் நிலையில், பகுதி பி உரையில் மறைமுக வரிகள் உள்ளிட்ட குறைந்தளவு உரையே இடம்பெறும். ஆனால், இந்த பட்ஜெட்டில் இரண்டு பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிர்மலா சீதாராமன், நீண்ட நேரம் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. தொடர்ச்சியாக 9ஆவது முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

