கோலாலம்பூர், பிப்ரவரி 1:
கிள்ளான், ஜாலான் மேரு – ஜாலான் சாலே (Jalan Meru–Jalan Salleh) போக்குவரத்துச் சந்திப்பில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில் உள்ளூர் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று (சனிக்கிழமை) மாலை சுமார் 4.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த நபர் மேருவிலிருந்து கிள்ளான் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இடதுபுறமாக ஒரு டிரெய்லர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் அடியில் விழுந்துள்ளது.
லோரியின் சக்கரத்தில் சிக்கிய அந்த நபருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார் என்று, வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் கூறினார்.
விபத்தை ஏற்படுத்திய டிரெய்லர் லோரி ஓட்டுநர் (உள்ளூர் நபர்) எவ்வித காயமுமின்றி தப்பினார்.
இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தைக் நேரில் பார்த்தவர்கள் அல்லது விபத்து குறித்த தகவல் அறிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அஹ்மட் ஃபட்சிலி (017-5843 860) என்பவரைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.




