Last Updated:
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் முடித்திருக்கிறது இந்திய அணி.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது. இதில் 4 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றது நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடைசி மற்றும் ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அபிஷேக் ஷர்மா 30 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து இணைந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யா குமார் யாதவ் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர் 30 பந்துகளில் சூரியகுமார் யாதவ் 63 ரன்கள் எடுத்தார். இசான் கிஷன் 43 பந்துகளில் 10 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் சிக்சருடன் 42 ரன்கள் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 271 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
விக்கெட் கீப்பர் டிம் செய்பர்ட் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் மற்றொரு வீரர் ஃபின் ஆலன் 38 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். ரச்சின் ரவிந்திரா 30 ரன்களில் ஆட்டமிழக்க டேரில் மிட்செல் 26 எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்தவர்களில் இஷ் சோதி மட்டும் 33 ரன்கள் எடுத்தார். 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்துஅணி 225 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் முடித்திருக்கிறது இந்திய அணி.
Jan 31, 2026 10:45 AM IST


