Last Updated:
ஐதராபாத் ஏ.டி.எம்-ல் பணம் டெபாசிட் செய்யச் சென்ற ஆடை வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஐதராபாத்தில் ஏடிஎம் மையத்தில், பணம் டெபாசிட் செய்ய வந்த வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு ரூ.6 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதிகாலை நேரம் அரங்கேறிய படுபயங்கர சம்பவத்தில், போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன?
ஏ.டி.எம்-ல் பணம் டெபாசிட் செய்யச் சென்ற ஆடை வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குண்டு அடிபட்டு உயிருக்குப் போராடியவரிடம் இருந்து, 6 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பித்துள்ளனர். ஐதராபாத்தை அலறவிட்ட ஏடிஎம் மைய துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பரபரப்பு பின்னணி என்ன?
ஐதராபாத் கோடியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையின் ஏடிஎம் மையத்தில், இதே பகுதியைச் சேர்ந்த ஆடை வியாபாரி ரஷீத் பணம் டெபாசிட் செய்ய வந்துள்ளார். அப்போது இப்பகுதியில் காத்திருந்த கொள்ளையர்கள் இருவர், ரஷீத் ஏடிஎம் மையத்தில் நுழைந்தவுடன் சட்டென்று உள்ளே புகுந்தனர். ரஷீத்திடம் இருந்த பையில் பணக்கட்டுகள் இருப்பதைக் கண்டவர்கள், அவரைத் தாக்கி பணப்பையை அபகரிக்க முயன்றனர். ஆனால் ரஷீத், மர்ம நபர்களை எதிர்த்து நின்று பணப்பையைப் பறிக்க விடாமல் தடுத்துப் போராடியுள்ளார்.
அதனால், மர்ம நபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால், ரஷீத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் ரஷீத் சுருண்டு விழ, கொள்ளையர்கள் பணப்பையை அபகரித்துக் கொண்டு தயாராக வைத்திருந்த ஸ்கூட்டரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். மக்கள் மூலம் தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்த ரஷீத்தை மீட்டு சிகிச்சைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து கொள்ளையர்களைப் பிடிக்கக் களத்தில் இறங்கினர்.
துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? துணி வியாபாரியான ரஷீத், 6 லட்ச ரூபாயுடன் அந்நேரத்தில் ஏடிஎம் மையத்திற்கு வருவது எப்படி கொள்ளையர்களுக்குத் தெரியும்? பெரிய தொகை என்பதை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு துப்பாக்கியைக் கொண்டு வந்தது எப்படி? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இருப்பினும் கொள்ளையர்கள் பிடிபட்டால் மட்டுமே சம்பவத்தின் முழு பின்னணி குறித்து தெரியவரும். ஒட்டுமொத்த ஐதராபாத் காவல்துறையும் தற்போது மும்முனை தேடுதல் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Hyderabad,Telangana
ஐதராபாத்: ஏடிஎம் மையத்தில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு ரூ.6 லட்சம் கொள்ளை – படுபயங்கர சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கை என்ன…?


