
தனக்கு இசை தெரியாது என்று பத்மபாணி விருது பெற்றுக் கொண்ட இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். அவர் சொன்னதை கேட்டவர்களோ, ராஜா சாருக்கு தான் என்ன ஒரு தன்னடக்கம் என்று பாராட்டுகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சாம்பாஜிநகரில் இருக்கும் எம்.ஜி.எம். பல்கலைக்கழக வளாகத்தில் 11வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா நடந்தது. அந்த விழாவில் இசைஞானி என மக்கள் கொண்டாடும் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா தலைவர் நந்த்கிஷோர் கக்லிவால், எம்.ஜி.எம். பல்கலைக்கழக துணை வேந்தர் அன்குஷ்ராவ் கதம் மற்றும் ஆஸ்கர் விருது வென்ற சவுண்டு என்ஜினியரான ரசூல் பூக்குட்டி ஆகியோர் தான் இளையராஜாவுக்கு விருது வழங்கினார்கள்.
விருதை பெற்றுக் கொண்ட இளையராஜா கூறியதாவது,என்னுடைய 1, 541வது படத்திற்கான பின்னணி இசையை முடித்துவிட்து தான் இந்த விருது விழாவுக்கு வந்திருக்கிறேன். எப்படி சார் டியூன் போடுகிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்பது உண்டு. அப்படி கேட்பவர்களிடம் எனக்கு இசை தெரியாது என்பேன். அதனால் தான் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இசையை பற்றி எனக்கு அனைத்துமே தெரிந்திருந்தால், நான் வீட்டில் இருந்திருப்பேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பு நான் இசையமைக்க ஆரம்பித்தபோது இசை வேறு மாதிரியாக இருந்தது. அந்த காலத்தில் தொழில்நுட்பம் எல்லாம் கிடையாது. நான் சொல்வது 1968ம் ஆண்டு பற்றி. ஆனால் தற்போது எலக்ட்ரானிக் கருவிகள், கீ போர்டுகளால் இசையமைப்பது எளிதாகிவிட்டது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.நான் இன்னும் லைவ் ஆர்கெஸ்ட்ராவை வைத்து தான் பாடலை பதிவு செய்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளுக்கு எதிரானவன் இல்லை. ஆனால் லைவ் கருவிகள் மூலம் தான் இசையின் எமோஷன் கிடைக்கும் என்றார்.
இளையராஜா பேசியதை கேட்டவர்கள் கூறியிருப்பதாவது, இளையராஜாவுக்கு 82 வயதாகிறது. இந்த வயதிலும் மனிதர் ஓய்வே இல்லாமல் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இசையில் ஞானி என்று பெயர் எடுத்தும் கூட தனக்கு இன்னும் இசை தெரியாததால் தொடர்ந்து வேலை செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு ரொம்ப தன்னடக்கம். இளையராஜாவுக்கு இசை தெரியாது என்றால் வேறு யாருக்கு தெரியும்?. இளையராஜா பாடல்கள் இல்லாமல் ஒரு நாள் கூட போனது இல்லை.சந்தோஷன் என்றாலும் துக்கம் என்றாலும் ராஜா இசை தான் என தெரிவித்துள்ளனர்.

