Last Updated:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 2026 நிலவரப்படி 701.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
2027 நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகபட்சமாக 7.2 சதவீதம் வரை இருக்கும் என இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக அதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது என்பது வழக்கமாக உள்ளது.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி, கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால கணிப்புகள் உள்ளிட்டவற்றுடன் அரசுக்கான பொருளாதார ரீதியிலான பரிந்துரைகள் வழங்கப்படும்.
இந்நிலையில் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் பின்வரும் முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவற்றின் விபரம்- ரவிருக்கும் 2026-27 (FY27) நிதி ஆண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.8% முதல் 7.2% வரை இருக்கும்.
உலக நாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தகப் போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் உள்நாட்டு நுகர்வுத் திறன் மற்றும் அரசின் கட்டமைப்பு முதலீடுகள் இந்த வளர்ச்சியைத் தக்கவைக்கும்.
பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் நிதி நிலைத்தன்மையைப் பொறுத்தவரை, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 2026 நிலவரப்படி 701.4 பில்லியன் டாலராக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது
உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, பி.எல்.ஐ திட்டங்கள் மூலம் இதுவரை 12.6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதும், தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் மீண்டும் வேகம் பெற்றுள்ளதும் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஒரு பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்பது உள்ளிட்ட விபரங்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.


