Last Updated:
Union Budget 2026 | குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசினார்.
குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். குடியரசு தலைவர் தனது உரையில், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றமே அரசின் முக்கிய நோக்கம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பயணத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்றார்.
நாட்டின் தேசபக்தி கீதமான “வந்தே மாதரம்” இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். இதையொட்டி நாடு முழுவதும் பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதை அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். இது இந்தியாவின் கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக அமைந்தது என்று குடியரசு தலைவர் பெருமை படத் தெரிவித்தார்.
இந்நிலையில், தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் பாம்பன் புதிய தூக்குப் பாலம், கங்கைக்கொண்ட சோழபுரத்தின் சிறப்புகள் உள்ளிட்டவை குறித்து பேசினார். மேலும் நாட்டு மக்கள் தாங்கள் புகழ்பெற்ற வரலாற்றை பற்றிப் பெருமைப்படும் வாய்ப்பை கங்கை கொண்ட சோழபுரம் அளித்துள்ளதாக கூறினார். மேலும் உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டை பெருமைப்படுத்திய குடியரசு தலைவர்.. என்ன சொன்னார்?


