Last Updated:
Ajit Pawar | நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார், மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக 6 முறை பதவி வகித்தவர் ஆவார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
யார் இந்த அஜித் பவார்?
நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார், ஜூலை 22, 1959 இல் பிறந்தவர். 1982-ல் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், 1991-ல் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 4 மாதங்களில் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
அதே ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். இதே தொகுதியில் தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் அஜித் பவார் இருந்துள்ளார்.
சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் அஜித் பவார் தனித்து செயல்பட்டார். 2023 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (NCP) ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, அவரது பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணி அரசில் 3-வது பெரிய கட்சியாக அஜித் பவாரின் கட்சி உள்ளது.
Mumbai,Maharashtra
Jan 28, 2026 11:22 AM IST


