Last Updated:
அம்பேத்கரை குறிப்பிடாதது ஏன்? என மாநில அமைச்சரிடம் பெண் காவலர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு தின உரையில் அம்பேத்கரை குறிப்பிடாதது ஏன்? என மகாராஷ்டிர மாநில அமைச்சரிடம் பெண் காவலர் கேள்வி எழுப்பிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 77ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது. இதற்காக சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் கடமைப் பாதைக்கு வந்தனர்.
சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர். குடியரசுத் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டன. மேலும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.
இதேபோல், இந்திய முழுக்க அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஆளுநர்கள் குடியரசுத் தினத்திற்கு கொடி ஏற்றி மரியாதைச் செய்தனர். இதில், அம்மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உரையாற்றிய அமைச்சர் கிரிஷ் மகாஜனை மறித்த பெண் காவலர் மாதவி மனோகர், உரையின் போது ஏன் அம்பேத்கர் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், தனது பேச்சால் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அதுகுறித்து கவலைப்பட மாட்டேன் என தெரிவித்தார்.
नाशिकमध्ये महिला पोलिसानं गिरीश महाजनांना विचारला जाव, थेट नोकरी सोडण्याची दाखवली तयारी pic.twitter.com/knTrfhd1y7
— News18 Marathi (@News18_marathi) January 26, 2026
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கிரிஷ் மகாஜன், அம்பேத்கர் பெயரை குறிப்பிடாமல் போனது திட்டமிட்டு நடந்ததல்ல எனவும் தவறுக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார். மேலும், அமைச்சரிடம் பெண் காவலர் கேள்வி எழுப்பிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jan 26, 2026 10:10 PM IST
“அம்பேத்கர் பெயரை ஏன் குறிப்பிடவில்லை” – குடியரசு தின நிகழ்ச்சியில் அமைச்சரிடம் பெண் காவலர் கேள்வி


