கோலாலம்பூர்:
பெற்றோரை இழந்து உடல் ஊனமுற்ற உறவுகளைப் பராமரித்து சொந்த செலவிலேயே சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் நிலையில் படிப்பதோடு வீட்டு வாடகை, இதர செலவு என கடினமான சூழலில் தனது அன்றாட வாழ்க்கைக்காக சுழன்று கொண்டிருக்கும் மாணவர் சில்வஸ்டன் சந்தியாகுவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் தொழில் முனைவோர் மேம்பாட்டு, கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம்.

இதய நோய் காரணமாக தந்தையையும் புற்றுநோய் காரணமாக தாயாரையும் அடுத்தடுத்த சில மாதங்களிலேயே பறிகொடுத்துள்ளார் சில்வஸ்டன்.
சிறு வயது முதலே வறுமையான சூழலில் வாழ்ந்து வந்த சில்வஸ்டன், தனது பெற்றோரின் சுமையைக் குறைக்க 15 வயதிலேயே பாதுகாவலராக வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.
குடும்ப வறுமைக்காக வேலை செய்தாலும் கல்விக்காகவும் வருமானத்தை சேமிக்கத் தொடங்கிய சில்வஸ்டன் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

உயர்கல்வி படிப்பை முடித்து நல்ல வருமானத்தில் வேலை செய்து பெற்றோரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய சில்வஸ்டனுக்கு அம்மா, அப்பா இருவருமே மரணத்தைத் தழுவியது சொல்லொணா துயரமாக அமைந்து விட்டது.

25 வயது நிரம்பிய சில்வஸ்டன் கிரேப் ஓட்டுநராக இன்னமும் பணி செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பினாங்கில் மாற்றுத்திறனாளியான உறவுக்காரருக்கு பணம் கொடுப்பது, வீட்டு வாடகை, பல்கலைக்கழகக் கட்டணம், தினசரி செலவு என பல சுமைகளை தனது தோளில் ஏற்றிக் கொண்டுள்ளார்.
கிரேப் தொழில் செய்வதில் வரும் வருமானமே இத்தனை செலவுகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நிலையில் அண்மையில் சிக்கிய விபத்தில் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் கிரேப் சேவையில் ஈடுபட இயலவில்லை என்று சில்வஸ்டன் தம்மிடம் கூறியதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
முழங்காலில் காயம் ஏற்பட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வேலைக்குச் செல்லாததால் வருமானம் ஈட்ட முடியவில்லை. சில நாட்களை பட்டினியிலேயே கழித்திருப்பதாகவும் சில்வஸ்டன் குறிப்பிட்டார்.
பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் உயர்கல்வியை முடித்து விட வேண்டும் எனும் வேட்கையைக் கொண்டிருக்கும் சில்வஸ்டனுக்கு உதவிக்கரம் நீட்டுவதாகக் கூறிய ஸ்டீவன் சிம், முதற்கட்ட நிதியாக 5,000 ரிங்கிட்டைக் கொடுத்து உதவினார்.

பணம் இல்லையே என்பதற்காக உயர்கல்வியை பாதியிலேயே கைவிட்டு வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிக் கொள்ளும் நிலை சில்வஸ்டனுக்கு ஏற்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் அவரின் சுமைகளில் நானும் பங்கு கொள்கிறேன் என்ற ஸ்டீவம் சிம், பல்கலைக்கழகக் கட்டணம், வீட்டு வாடகை, அவரின் தனிப்பட்ட பராமரிப்பு செலவினங்களை ஈடுகட்ட மொத்தமாக 20,000 ரிங்கிட் ஆகும். அதற்கு துணை புரிகிறேன் என்றார்.

பல்வேறு சுமைகளிலிருந்து சில்வஸ்டன் விடுபடட்டும். இனிமேல் தான் அவர் நிம்மதி பெருமூச்சு விடுவார் என்று அவர் மேலும் சொன்னார். சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் இளங்கலை கல்வி பயிலும் சில்வஸ்டன் வரும் 2026 அக்டோபர் மாதம் தனது இப்பட்டப் படிப்பை நிறைவு செய்ய உள்ளார்.
The post வறுமையிலும் உயர்கல்வியை கைவிடாத சில்வஸ்டன்; அரவணைத்தார் ஸ்டீவன் சிம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

