மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்.பி. அன்வருல் அசீம் படுகொலை செய்யப்பட்டு, துண்டுதுண்டாக வெட்டிவீசப்பட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச நாட்டின் எம்.பி.யான அன்வருல் அசீம், கொல்கத்தாவில் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்திருந்தார். கொல்கத்தா மஜிதியா பகுதியில் உள்ள அவரது நெருங்கிய நண்பரான நகை ஏற்றுமதியாளர் கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி திடீரென மாயமானார்.
இதையடுத்து, அன்வருல் அசீமை வலைவீசித் தேடிய கொல்கத்தா போலீசார், அவரை கடத்திச் சென்றதாக 3 பேரை கைது செய்தனர். இந்த 3 பேர் தான் வங்கதேச எம்.பி. அன்வருல் அசீமை துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்ததாக, அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், கொலைக்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க முடியாது என்றும் வங்கதேச உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அன்வருல் அசீமை கொலை செய்தவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தியாவுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, அன்வருல் அசீமின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தா பொலீஸ் தெரிவித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
