Last Updated:
சென்னையில் 77வது குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் அணிவகுத்தனர். அதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமி உடன் வருகை தந்தார். அவருக்கும் விமான படையின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து வந்தது.
இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 5-வது முறையாக கவர்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். பின்னர் ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர்.
குடியரசு தின விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் குடியரசு தின விழாவை காண பொதுமக்கள் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
Chennai,Tamil Nadu


