Last Updated:
அபிஷேக் சர்மா அதிரடி, பும்ரா 3 விக்கெட், சூர்யகுமார் யாதவ் அருமை; இந்தியா 3வது டி20யில் நியூஸிலாந்து மீது வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அபிஷேக் சர்மா மீண்டும் அதிரடியாக விளையாடினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று சூப்பர் ஃபார்மில் இருக்கிறது.
இன்றைய போட்டியிலும் அது தொடர்ந்தது. 3வது டி-20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா. எதிர்பார்த்தது போலவே இந்திய பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். முதல் ஓவரிலேயே டெவான் கான்வே, இரண்டாவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா இந்திய வேகப்பந்துவீச்சில் பறிகொடுத்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தன. நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்பின் இறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து அணியை மீட்டெடுத்ததுடன் அதிரடியில் வெளுத்து வாங்கினர். 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த இஷான் கிஷன் விக்கெட்டானாலும், சூர்யகுமார் யாதவ் தனது ஃபார்மை தொடர்ந்தார். அவருடன் வழக்கம் போல் அபிஷேக் சர்மா தனது அதிரடி சரவெடியை வெடிக்க இந்திய அணி இலக்கை நோக்கி முன்னேறியது.
இறுதியில் 10 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 155 ரன்களை குவித்து வெற்றி பெற்றது இந்தியா. அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்ததுடன் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதேபோல் சூரியகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


